ஏற்கனவே கல்வி நிலையங்களிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டை பெற்ற பிற பிற்படுத்தப்பட்டவர், பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலின பழங்குடி மக்கள் ஆகியோரை விடுத்து பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சாசன திருத்தத்தின் செல்லுபடித் தன்மையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இப்போது ஆராய்ந்து வருகிறது. விசாரணைக்காக மூன்று பிரச்னைகளை இறுதிப்படுத்தி வைத்திருக்கிறது அமர்வு – மாநிலங்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள அனுமதி வழங்கியதன் மூலம் இந்த திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறியிருக்கிறதா என்பது; தனியார், அரசு உதவி பெறாத நிறுவனங்களின் சேர்க்கையிலும் அது அவ்வாறு செய்கிறதா என்பது; இறுதியாக, பிற பிற்படுத்தப்பட்டவர்/பட்டியலின சாதி மக்கள்/பட்டியலின பழங்குடி மக்கள் ஆகிய சமூகங்களை உள்ளடக்காததன் மூலம் இந்த இட ஒதுக்கீட்டுக்கான நோக்கம் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறதா என்பது. இவை சரியான கேள்விகள். தவிர 2019ல் இந்த இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் நிறைவேற்றப்படும்போது அவசரகதியில், அதற்கான அளவுகோள்களை உரிய முறையில் பின்பற்றாமல் நிறைவேற்றப்பட்டது என்று வாதிடலாம். உதாரணத்துக்கு, ஒருவர் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்கிற வகைமைக்குள் வருவாரா என்பதை முடிவுசெய்ய ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானமாக உச்சபட்சமாக 8 லட்ச ரூபாய் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் நிச்சயம் பிரச்னைக்குரியதுதான். “ஒரு குடும்பத்தின் நுகர்வு செலவு, 2011-12ன் முக்கிய குறியீடுகள்” போன்ற என்.எஸ்.எஸ்.ஒ. (NSSO) அறிக்கைகள் உள்ளிட்ட நமக்கு கிடைக்க கூடிய நுகர்வோர் செலவுக்கான ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, மக்கள் தொகையில் ஒரு பெரும் எண்ணிக்கையினர் இந்த ‘8 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருவாயுடைய’ பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீடுக்கு ஏற்றவர்களாக இருப்பார்களே தவிர, ஏழை மக்களில் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள். அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு இந்த உச்சவரம்பு நியாயமானது என்று அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் பிற பிற்படுத்தப்பட்டவருக்கான கிரீமி லேயரில் உள்ள வருமான உச்சவரம்பைவிட இந்த வருமானத்துக்கான அளவுகோல் எப்படி “இன்னும் கடுமையானது” என்பதை அவர்களால் போதுமான அளவு விளக்க முடியவில்லை. மக்கள் தொகையில் பொருளாதார நலிந்த பிரிவில் வரும் நபர்களின் கணக்கிடப்பட்ட எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய வருமானங்கள் பற்றிய தரவுகளில் எந்த விதத்திலும் இந்த 8 லட்ச ரூபாய் என்ற எண் பொருந்திப் போகவில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின சாதி மக்கள்/பட்டியலின பழங்குடியின மக்களை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்கிற வகைமையிலிருந்து விலக்கி வைப்பதன் மூலம், 10 சதவிகித இடங்களில் பொதுப் பிரிவினரோடு போட்டிபோடும் வாய்ப்பை அவர்கள் இழக்கிறார்கள் என்றும் இதன் பொருட்டு இந்த இட ஒதுக்கீடு “முற்பட்ட வகுப்பினருக்கு” மட்டுமே சேரும் என்றும் மனுதாரர்கள் வாதிடுகிறார்கள். இது ஒரு முக்கியமான வாதம். பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் ஒப்புக் கொண்டாலும் – இதுவரை அது வெளிப்படையாக மறுக்கப்பட்டிருக்கிறது, சமூக மற்றும் கல்விரீதியான பிற்படுத்தப்பட்ட நிலையே அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மற்றும் பல தீர்ப்புகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது – குறிப்பிட்ட சில சமூகங்களை சேர்ந்த மக்களை அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராக இருந்தாலும்கூட இந்த இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பது, அந்த சட்டத்தையே பாகுபாடு உடையதாக மாற்றிவிடும். இந்திய குடிமைப் பணி தேர்வு மற்றும் ஜே.இ.இ. போன்றவற்றின் சமீபத்திய ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளில், சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு குறைவாக இருந்தது. சுருக்கமாக சொன்னால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரை அடையாளம் காண வருமானம் ஒரு அளவுகோலாக இருக்கும் என்றால், 8 லட்ச ரூபாய் என்பது போல அல்லாமல் முறையாக முடிவு செய்யப்பட்ட ஒரு எண்ணிக்கையாக அது இருக்க வேண்டும். தவிர, எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமூகத்தின் எல்லா தரப்பினரும் இந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டை பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.