அப்பட்டமான மிரட்டல் 

பிபிசி மீதான வருமான வரி கணக்கெடுப்பு போன்ற நடவடிக்கைகள், அச்சமூட்டும் விளைவுகளை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்படுகின்றன.

Published - February 16, 2023 11:07 am IST

புது தில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசியின் அலுவலகங்களில் வருமான வரித் துறை மேற்கொண்ட இரண்டு-நாள் கணக்கெடுப்பு என்பது இங்கிலாந்தில் பெரிய அளவில் மதிக்கப்படும் ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகதான் பார்க்க முடியும். பிபிசி மட்டுமல்லாமல், கடந்த கால நடவடிக்கைகளுக்காக தற்போதைய அரசை கேள்விக்குட்படுத்த நினைக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். “பரிமாற்ற விலை நிர்ணயம்” மற்றும் “லாபங்களை திசை திருப்புதல்” போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், “இந்தியா: மோதி பற்றிய கேள்விகள்” என்ற இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப் படம் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அடிப்படையில், கணக்கியல்/நிதி ரீதியாக நடக்கும் ஒரு ஆய்வுக்கு ஊடகவியலாளர்களும் உட்படுத்தப்பட்டார்கள் என்பது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடியும். தவிர, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69 ஏ ஆகியவற்றின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆவணப்படத்தின் முதல் பகுதிக்கான இணைப்புகளை முடக்குமாறு ஆன்லைன் ஊடக தளங்களுக்கு சமீபத்தில் உத்தரவுகளை பிறப்பித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரவையின் நடவடிக்கைகளையடுத்து இது நடந்திருக்கிறது. ஆவணப் படத்துக்கான இணைப்புகளை பகிர்ந்த டிவீட்களும் முடக்கப்பட்டன. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்களின் எதிர்வினைகள் விமர்சனப்பூர்வமான ஊடக நிறுவனங்கள் செய்யும் பணிகளை சட்டப்பூர்வமற்றதாக்கும் முயற்சி என்கிற கருத்தை வலுப்படுத்தவே செய்தது. அதிலும் ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசியை “ஊழல்” நிறுவனம் என்றார். கடந்த காலங்களில் நடந்த இதே போன்ற நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் பிபிசியில் நடந்த கணக்கெடுப்பு விதிவிலக்கில்லை: 2021ஆம் ஆண்டில் டிஜிட்டல் செய்தி நிறுவனமான நியூஸ் லாண்ட்ரியில் இது நடந்திருக்கிறது. 2017ல்

என்டிடிவியில் சிபிஐயின் சோதனை, 2021ல் இணையத்தளமான நியூஸ்கிளிக்கில் அமலாக்கத்துறையின் தேடல்கள் மற்றும் தைனிக் பாஸ்கர் குழுமத்தில் வருமான வரி தேடல்கள் ஆகியவை இதற்கு முன்பு நடந்திருக்கின்றன. கடந்த ஆண்டு, டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளிக்கும் சுயாதீன மற்றும் பொது நலன் சார்ந்த ஊடக அறக்கட்டளை மற்றும் சிந்தனைக் குழுவான கொள்கை ஆராய்ச்சி மையம் ஆகியவை இதுபோன்ற “கணக்கெடுப்புகளை” எதிர்கொண்டன. இவையெல்லாவற்றுக்கும் பொதுவான, சந்தேகத்திற்கிடமற்ற அம்சம், இந்த ஊடக நிறுவனங்கள் மத்திய அரசை விமர்சிக்கும் உள்ளடக்கங்களை வெளியிட்டன என்பதுதான். உலகமயமான சூழலில் வளர்ந்து வரும் ஒரு நாடாகவும் வளரும் ஒரு பொருளாதாரமாகவும் இந்தியா முன்வைக்கும் பிம்பம் என்பது, அரசியலமைப்பு ரீதியாக உத்திரவாதமளிக்கப்பட்ட சுயாதீன அமைப்புகளையும் அதிகார பிரிவினைகளைக் கொண்ட ஒரு செழிப்பான ஜனநாயகத்தையும் கொண்ட ஒரு நாடு என்பதுதான். பொருளாதார செழிப்பை ஊக்குவிக்கும் அதே நேரம், நிறுவனம் சார்ந்த விதிகளையோ மதிப்பீடுகளையோ கணக்கிலெடுக்காத சர்வாதிகார ஆட்சிகள் போல் கிடையாது என்ற பிம்பமும் முன்வைக்கப்படுகிறது. இந்த கருத்தாக்கத்தின் மையத்தில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பவர்களை பொறுப்பாக்குவதில் ஊடகங்களுக்கு உள்ள சுதந்திரம். ஊடக நிறுவனங்கள் சங்கடமான கேள்விகளை எழுப்பினாலும், பதில்கள் உண்மையாகவும் நியாயமானதாகவும் நிதானமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் பிபிசி ஆவணப்படத்திற்கான எதிர்வினையில் இது எதுவுமே இல்லை. சொல்லப்போனால், ஆவணப்படத்தை தடை செய்யும் முயற்சியில் அரசு, அபத்தமாக செயல்பட்டது. தற்போது பிபிசி அலுவலகங்களில் நடந்த கணக்கெடுப்பின் மூலம் அச்சுறுத்தும் அரசாக அது வெளிப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, இந்தியாவின் சர்வதேச பிம்பத்திற்கு இது உகந்ததல்ல. ஆனால் அதைவிட முக்கியமாக, நாட்டின் குடிமக்களுக்கு இப்போதிருக்கும் சுதந்திரங்களுக்கு இது தெளிவான ஒரு அச்சுறுத்தல்.

This editorial has been translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.

  翻译: