ஞாயிற்றுக்கிழமை அன்று இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவை தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை காங்கிரஸ் தொடக்கி வைத்திருக்கிறது. கட்சியின் இருண்ட காலத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றி, ஒரு புதிய ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது. மிகக் குறுகிய வெற்றிதான் – எதிர்கட்சியான பா.ஜ.கவைவிட ஒரு சதவீத புள்ளிதான் கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. வெறும் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம் மிகச்சிறிய மாநிலம். ஆனால் ஒரு இடைவேளைக்குப் பிறகு, ஐந்தாண்டுகள் கழித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பது, பா.ஜ.கவுக்கு மாற்றைத் தேடும் மக்களுக்கான தேர்வாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை அந்த கட்சிக்குக் கொடுத்திருக்கிறது. உச்ச பதவிக்கான சண்டையை விரைவாகவும் சுமுகமாகவும் முடித்துவிட்டது அந்த கட்சி. திரு.சுகுவை தேர்ந்தெடுத்ததன் மூலம், தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு மாற்றத்தை உருவாக்கியதுடன் வாரிசு அரசியல் என்கிற அரசியல்ரீதியான குற்றசாட்டையும் மழுங்கடித்தது. பேருந்து ஓட்டுனரின் மகனும் தொடக்க வருடங்களில் பால் விற்றவருமான திரு.சுகு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு அரசியல்வாதி எவ்வளவு தூரம் மிதமானவராகவும் உறுதியானவராகவும் இருக்க முடியுமோ, அவ்வளவு தூரம் இருப்பவர். அதிர்ந்து பேசாத தலைவர். எனினும் பொறுப்புகளை தவிர்க்காமல் இருந்தவர். பல பத்தாண்டுகளாக காங்கிரசை கட்டியாண்ட வீரபத்ர சிங்கிற்கு சவாலாக இருந்தவர். இந்த பணிக்கு தனித்துவமான தகுதியைக் கொண்டவர் திரு.சுகு. அவரது பதவி உயர்வு, காங்கிரஸுக்கு மிகத் தேவையான ஆனால் இல்லாமல் போன ஒரு ஆற்றலுக்கான அறிகுறி.
கட்சியின் இயக்கத்தையும் நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரிய பணி புதிய தலைவருக்குக் காத்திருக்கிறது. காங்கிரஸ் பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அவற்றுள் பல வாக்குறுதிகள் முழுமையாக சிந்திக்காமல் தரப்பட்டவை. சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய ஓய்வூதிய முறை/திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதுதான் இந்த பட்டியலில் முதன்மையாக இருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு திரும்புவது என்பது, புதிய நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஆகும். அதனால் கருவூலத்துக்கு சுமை கூடும். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1.5 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். அதை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள். காங்கிரஸில் நன்கு வேரூன்றியிருக்கும் அதிகார கட்டமைப்பை திரு.சுகுவின் பதவி உயர்வு சமன் இழக்கச்செய்யும். வீரபத்ர சிங்கின் விசுவாசிகளும் குடும்பமும் தனக்கு ஆதரவாக இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். காங்கிரசின் தேசிய அளவிலான திட்டங்களிலிருந்து எழும் எதிர்பார்ப்புகளின் சுமையையும் அவர் சேர்த்து சுமக்க வேண்டும். பிற இடங்களில் வெற்றிபெற, தனது ஆட்சியின் கீழ் இருக்கும் மூன்று மாநிலங்களின் நிர்வாகத்தை முன்மாதிரியாகக் காட்ட காங்கிரஸ் விரும்புகிறது. இமாச்சலப் பிரதேசம் சிறிய மாநிலமாக இருக்கலாம். ஆனால் அதன் அளவுக்கு உகந்ததாக இல்லாத ஒரு அரசியல் தகுதியை ஆட்சி மாற்றத்தோடு அது பெற்றிருக்கிறது. அரசியலில் 40 வருடங்களாக திரு.சுகு பெற்றிருக்கும் நல்லெண்ணம்தான் அவருக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.
Published - December 13, 2022 11:47 am IST