இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது காங்கிரஸ் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார். அப்படி செய்யும் நான்காவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருக்கும். கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதமளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி, நெருக்கடியில் இருந்த கட்சிக்கு ஊக்கமளித்தது என்பதில் ஆச்சரியமில்லை. மலை மாநிலத்தின் வாக்காளர்களில் கணிசமானவர்கள் அரசு ஊழியர்களும் ஓய்வுப் பெற்றவர்களும்தான். லோக்நீதி-சிடிஎஸ்ஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸின் இந்த வாக்குறுதி பற்றிய விழிப்புணர்வும் (கருத்துக் கணிப்பில் பங்கு கொண்டவர்களில் 74 சதவிகிதம்) ஆதரவும் அதிகம் என்ற உண்மையை தெளிவுப்படுத்தியது. பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு இது காங்கிரசிற்கு உதவியிருக்கலாம். இரு கட்சிகளுக்கும் இடையில் ஒற்றை சதவிகித புள்ளி அளவே வேறுபாடு இருந்தது. 2004ல் தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர் ஓய்வூதிய நிதிக்கு அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவிகித பங்களிப்பை தவிர்ப்பதால் அரசு ஊழியர்களுக்கு இந்த திட்டம் ஏற்புடையதாக இருப்பதுப்போல தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவது மாநிலத்தின் நிதிக் கருவூலத்துக்கு சுமையை அதிகரிக்கும். மாநிலங்களின் வரி வருவாயில் 25.6 சதவிகிதம் ஓய்வூதியங்களுக்கே செலவாகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் இது 80 சதவிகிதம். புதிய திட்டமும்கூட மாநிலங்களின் மொத்த வருவாய் வரவுகளில் 12 சதவிகித்துக்கு அருகிலேயே இருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளங்களோடு, இது சுமையை மிகக் கடுமையாக்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு திரும்பும் மாநிலங்களுக்கு தற்காலிகமாக சில லாபங்கள் இருக்கலாம். ஊழியர் ஓய்வூதிய நிதிக்கு, ஊழியர்களுக்கு நிகராக 10 சதவிகித பங்களிப்பை அரசு செலுத்த வேண்டியதில்லை. ஆனால் வயதானவர்கள் மக்கள் தொகை அதிகமாகும்போது, செலவுகளுக்கான சுமை எதிர்கால தலைமுறைகள் மீது விழும். இந்த திட்டத்துக்கான நிதியின்
பொருட்டு மேலும் வரி விதிப்பதன் மூலம் மாநில வருவாயை அதிகரிக்கலாம் என்றொரு வாதம் இருக்கிறது. ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களது ஓய்வூதியதிற்கு பங்களிக்கலாம். அரசிடமிருந்து அதே அளவு பங்களிப்பும் இருக்கும். ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் இந்த தொகை முதலீடு செய்யப்படுவதால் இது வலுவானது. தவிர, மாநிலத்தின் சுமையையும் குறைக்கிறது. காலப்போக்கில் கணிசமான நிதியையும் சந்தாத் தளத்தையும் உருவாக்கியிருக்கிறது புதிய ஓய்வூதியத் திட்டம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதற்கு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் ஓய்வூதிய சீர்திருத்தங்களை முன்னெடுத்திருந்தது. அப்படிதான் பல வருடங்களாக புதிய ஓய்வூதிய திட்டம் பொருத்தமான ஒன்றாக மாறியிருக்கிறது. ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மீதான ஒருமித்த கருத்தை உடைத்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவது விவேகமான முடிவு இல்லை. காரணம் அது, அமைப்பு சார்ந்த அரசு துறை ஊழியர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். நிதிச் சுமையை கூட்டும். தவிர, மாநில நிதிநிலையில் கணிசமான பகுதியை எடுத்துக் கொள்ளும். இதனால் பொது நலனுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறையும். குறுகிய கால தேர்தல் ஆதாயங்களுக்கு உதவினாலும், அரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்களுக்கு பலனளித்தாலும், இதுதான் உண்மை.
This editorial has been translated from English, which can be read here.
Published - December 16, 2022 11:30 am IST