சட்டவிரோதமாக இங்கிலாந்தை அடையும் புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் வழங்குவதை தடுக்கும் ஒரு புதிய “சட்டவிரோத குடியேற்ற சட்டத்தை” நிறைவேற்றுவதற்கான இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு ஐ.நா அகதிகள் அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. “படகுகளை நிறுத்து” என்று குறிக்கப்பட்ட மேடையில் நின்று கொண்டிருக்கும்போது திரு. சுனக், இங்கிலாந்துக்கு பயணம் செய்ய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் பிரித்தானிய மண்ணுக்கு வந்த பிறகு, புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறித்து அரசு கவலை கொண்டிருக்கிறது என்றும் அரசுக்கு இது கணிசமான செலவை ஏற்படுத்துகிறது என்றும் சொன்னார். அதற்கு பதிலாக, இந்த வாரம் மசோதாவை அறிமுகப்படுத்தும் போது உள்துறை செயலாளர் சூயெல்லா பிராவர்மன் விளக்கியபடி, சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது அவர்களுக்கான செயலாக்க வசதிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஒரு “மூன்றாவது நாட்டிற்கு” திருப்பி அனுப்பப்படுவார்கள். அனேகமாக அது ருவாண்டாவாக இருக்கக் கூடும். தவிர, குடியுரிமை பெறுவதற்கும் மீண்டும் இங்கிலாந்தில் நுழைவதற்கும் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும். யு.என்.எச்.சி.ஆரின் கூற்றுப்படி, பிரிட்டன் கையெழுத்திட்ட 1951ஆம் ஆண்டின் அகதிகள் உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை இந்த சட்டம் மீறும். முதலில், தங்கள் வீடுகளையும் நாடுகளையும் விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் சரியான ஆவணங்கள் இல்லாமல் அவ்வாறு செய்கிறார்கள். காரணம், அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். கடந்த ஆண்டு “சிறிய படகுகளில்” இங்கிலாந்துக்கு வந்த சுமார் 45,000 பேரில் பலர் அரசியல் தஞ்சம் கோருபவர்களாக இல்லாமல் பொருளாதார அகதிகளாகத்தான் இருந்திருப்பார்கள். இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் இங்கிலாந்து அரசு பார்க்கவில்லை என்பது பிரச்னைக்குரிய ஒன்று. இந்த மசோதா தப்பி வரும் நாடுகளிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கிறது. ஆனால் “சிறிய படகுகள்” பயணிக்கக்கூடிய குறுகிய தூரங்களைக் கருத்தில் கொண்டால், அவை ஒரு சிறிய விகிதமாகவே இருக்கும். “அந்தச் சுவரைக் கட்டியெழுப்புங்கள்” என்ற கோஷத்தை கையில் எடுத்த அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தைப் போலவே, பிரிட்டிஷ் அரசும் புலம் பெயர்ந்தவர்களை கொண்டு வரும் சின்ன படகுகளுக்கு தடையாக இருப்பதில் தோற்றுப் போனால், கோஷம் எழுப்புவதில் பெரிதாகவும் அந்த திட்டத்தை உண்மையாக செயல்படுத்துவதில் சின்னதாகவுமே இருக்கும். தவிர, தஞ்சம் கோருபவர்களை ஒரு மூன்றாவது நாட்டுக்கு அனுப்பும் திட்டம், நவ காலனிய தொனியைக் கொண்டிருக்கிறது என்பதோடு கணிசமான செலவையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும். வேறு வழியெதுவும் இல்லாத புலம்பெயர் மக்களால் அனேகமாக அவ்வளவு செலவு செய்ய முடியாது.
பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கை சிறிய படகுகளில் வருபவர்களை நிறுத்துவதற்கானதுதான் என்றாலும் அதை பிற ஜனநாயக நாடுகளில் குடியேறிகளுக்கு எதிராகவும் வெளிநாட்டவர்களுக்கு எதிராகவும் வலுவடைந்துவரும் உணர்வுகளின் பரந்த அரசியல் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டும். ரோஹிங்யா அகதிகளை மியான்மருக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு சர்வதேச சட்டம் மற்றும் உடன்படிக்கையை நீண்ட காலமாக மேற்கோள் காட்டி வருகின்றன. குடியுரிமை (திருத்த) சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல் பற்றியும் பேசி வருகின்றன. ஆனால் அதே நேரம், அந்த நாடுகளும் இது போன்ற சட்டங்களை இயற்றுவதன் மூலம், உலகுக்கு தாங்கள் சொல்லும் செய்திகளை சுயபரிசோதனைக்குட்படுத்த வேண்டும். இன்னும் சிறந்த வாழ்க்கையை தேடி, பாதுகாப்பற்ற கடற்கரைகளை தாண்டியே புகலிடம் கோருபவர்களும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களும் வந்து சேர்கிறார்கள்.. அவர்களை நிராகரிப்பதன் மூலம், தமது சமூகங்களுக்கு அவர்கள் செய்த அசலான பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் இந்த நாடுகள் செய்கின்றன. அப்படி பங்களிப்புச் செய்தவர்களில் திரு. சுனக் மற்றும் திருமிகு. ப்ரேவர்மன் ஆகியோரின் பெற்றோர்களும்கூட இருக்கலாம். அவர்கள் இங்கு வந்தபோது, இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கலாம்.
This editorial has been translated from English, which can be read here.
Published - March 10, 2023 10:52 am IST