லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் மக்கியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவித்ததை இந்தியா வரவேற்றிருக்கிறது. கடந்த வருடம் மக்கி இந்த பட்டியலில் இடம்பெற சீனா வைத்திருந்த ‘தொழில்நுட்பரீதியான தடையை’ அந்த நாடு விலக்கிக் கொண்டதை அடுத்து இது நடந்தது. 26/11 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான மக்கி, இந்தியாவில் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்களுக்காகவும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மிகவும் தேடப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கிறார். மக்கியை பயங்கரவாத பட்டியலில் சேர்க்கும் செயல்பாட்டில் ஜூன் மாதம் சீனா விதித்த தடை, அதே போல பிற முன்மொழிவுகள் மீது சீனா விதித்த ஐந்து தடைகளில் ஒன்றுதான். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பிற தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா/ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.இ.எம்) பயங்கரவாதிகளுக்கு எதிராகதான் இந்த முன்மொழிவுகள் இருந்தன. இந்தியாவின் எதிர்வினை இதற்கு மிக கடுமையானதாக இருந்தது. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரையில் ‘இரட்டை நிலைப்பாட்டை’ சீனா கடைபிடிப்பதாக குற்றம்சாட்டிய இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அது கேலிக்குள்ளாகுகிறது என்றும் சொன்னது. அந்த வகையில், பட்டியலில் சேர்க்க அனுமதிக்கும் சீனாவின் முடிவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டாக கொண்டு வந்த ஒரு பட்டியல் முன்மொழிவு நிறைவேற்ற அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை. இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக ஒரு பயங்கரவாதி பட்டியலிடப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறையாகும். இதுவரை பெரும்பாலோர் தங்கள் அல்-கொய்தா தொடர்புகள் மற்றும் உலகின் பிற பகுதிகளில் தாக்குதல்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளார்கள். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பு நாடுகள் இந்த பட்டியலுக்கு ஒப்புக்கொண்ட போதிலும், சீனா தொடர்ந்து பிடிவாதமாக இருந்த காரணத்தால், சீனாவை பின்வாங்கத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2019 ஆம் வருடம் நடந்த புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு தொடர்பாக சர்வதேச கண்டனங்களுக்குப் பிறகுதான் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பட்டியலிட வேண்டும் என்ற இந்தியாவின் பத்தாண்டு கால கோரிக்கைக்கு சீனா ஒப்புக்கொண்டது. மக்கி பட்டியலிடப்படுவது, “சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உகந்த ஒன்று” என்று சொன்னது சீன வெளியுறவுத்துறை அமைச்சகம். பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்துக்கான “அங்கீகாரமும்” கூட என்றுது.
பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் சொத்து முடக்கப்பட்டு, பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு ஆயுத தடைக்கு உட்படுத்தப்படும் நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பட்டியலில் சேர்க்கப்படுவது அவர்களை நீதியை நோக்கி ஒரு படி முன்னகர்த்துவதுதான் என்று இந்தியாவுக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியும். பட்டியலில் உள்ள பல பயங்கரவாதிகளில் ஒருவரைக் கூட அவர்கள் மேற்கொண்ட பெரிய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் இன்னும் பொறுப்பாக்கவில்லை. 1999 ஐசி-814 காந்தஹார் கடத்தல். மும்பை 26/11 தாக்குதல்கள், பதான்கோட் மற்றும் புல்வாமா வரை பல தாக்குதல்கள் இதில் அடங்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக வெற்றிகரமாக வழக்கு தொடுக்கும் பொருட்டு பாகிஸ்தான் அதன் மீதான அழுத்தத்தை உணரும் வரையில், மக்கி மற்றும் பிறர் மீது கவனத்தை தக்க வைத்திருக்கும் மிகக் கடினமான பணியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அசலான எல்லைக் கோட்டையொட்டி ஏற்பட்ட மோதலில் இந்திய-சீன உறவுகள் சிக்கியிருந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலும் திரைக்குப் பின்னால் நடந்த பேச்சுவார்த்தைகளின் காரணமாகக் கூட மக்கி பட்டியிலிடப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த வியூகம் வெற்றிகரமானதா என்பதை இன்னும் நான்கு தீவிரவாதிகள் பட்டியிலடப்படுவது தொடர்பாக சீனா எடுக்கும் நடவடிக்கைகளில் தெரிய வரும். ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா, 26/11 கையாண்ட பயங்கரவாதி சாஜித் மிர், லஷ்கர் இ தொய்பாவுக்கு ஆட்களை சேர்த்த ஷாஹித் மெஹ்மூத் மற்றும் ஐசி-814 விமானக் கடத்தலில் தேடப்பட்டு வரும் அப்துல் ரவூப் அசார் (மசூத் அசாரின் சகோதரர்) ஆகியோர்தான் அந்த நால்வர்.
This editorial was translated from English, which can be read here.